Sunday 15 February 2015

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் 
ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்

ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு 

தங்கநகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்
பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்
முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும்
பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்
அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத
எந்தச் சொல்லுண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி
உள்ளம் நெகிழ்ந்தான் ஒரு கதிரைக் கொத்தாகக்
கிள்ளி முகர்ந்தான் கிறுகிறுத்துப் போகின்றான்.

வாடும் வயலுக்கு வார்க்கா முகில் கதிர்கள்
சூடும் சிறுபயிர்மேல் சோவென்று நள்ளிரவிற்
கொட்டும் உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்
எட்டுத் திசையும் நடுங்கி முழங்கி எழும்
ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்

பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே
கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று……..பின்னர் அது
வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி
பற்றி, அதோ பார் பழையபடி கிண்டுகிறான்
சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

Monday 2 February 2015

நா. கதிரவேற்பிள்ளை


நா. கதிரவேற்பிள்ளை (டிசம்பர் 3, 1860[1], - 1907), புலோலி, யாழ்ப்பாணம்) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும்,சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர்.

பொருளடக்கம்

  [மறை] 
·        1 பிறப்பு

பிறப்பு[தொகு]

யாழ்ப்பாணம் மேலைப் புலோலியில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, 1844 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்[1].

தமிழகம் பயணம்[தொகு]

தமிழின் மீதான ஆர்வத்தினால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில், தமிழ் கறக விரும்பியவருக்கு தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் உதவினார். புலமையும், கருணையும் கொண்டிருந்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்தசாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற கதரவேற்பிள்ளை, சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார்.

நூல்கள் இயற்றல்[தொகு]

தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும், நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். பழனித் தலப் புராணம், திருவருணைக் கலம்பகம், சிவராத்திரிப் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்குவிளக்கவுரை கண்டார்.
சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்[1].

அகராதி தொகுத்தல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ்ப் பேரகராதி
சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப்,
"பூவில் இடைகடை ஆதி எழுத்தின் முன்பேருறப்
பதித்த புத்தகங்கள்
யாவும் இடைகடை எனவே யாழ்ப்பாணப்
புலோலி நகரின்மாசீர்த்தி
பாவுபுதுச் சந்நிதியான் அருட் கதிரைவேற்
புலவன் பதித்த மேன்மை
மேவும் அகராதியிதே முதலதெனக் கிதின்பெய
ரேவிளங்கும் அன்றே."
என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார்[1].

ஆசிரியப் பணி[தொகு]

கதிரவேற்பிள்ளை, தமது 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி. கல்யாணசுந்தரனார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார்.

மருட்பா மறுப்பு[தொகு]

சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இந்த 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியம் சொன்னது குறிப்பிடத்தக்கது. இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது.

விருதுகள்[தொகு]

தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற நாவலர், சைவசித்தாந்த மகாசரபம், அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்,மகாவித்துவான், பெருஞ்சொற்கொண்டல் முதலிய பட்டங்களைப் பெற்றார். சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து சதாவதானி என்னும் பட்டத்தையும் பெற்றார்.

இறுதி நாட்கள்[தொகு]

மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று, இறைவனடி சேர்ந்தார். திரு. வி. க. , தமது குருநாதர் நினைவைப் போற்றும் வகையில், கதிரவேற்பிள்ளையின் தமிழ் வாழ்வை அரியதொரு நூலாக[2] எழுதி வெளியிட்டு, அதன் வாயிலாக தமிழுள்ளங்களின் நன்றிக்கடனை நிறைவு செய்து மகிழ்ந்தார்.

அடிக்குறிப்புகள்[தொகு]